தனியார் மினி பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே உள்ள ராமலிங்கபுரம் காலனி பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி இன்று தனது மகள் திருமணத்திற்காக பொருட்களை வாங்க தனியார் மினி பஸ்சில் பயணம் செய்து பொருட்களை வாங்கி கொண்டு ஊர் திரும்புவதற்காக தனியார் மினி பேருந்தில் சொந்த ஊரான ராமலிங்கபுரத்திற்கு பயணம் செய்தார்.
ராமலிங்கபுரம் பேருந்து நிறுத்தம் வந்தவுடன் இறங்குவதற்காக பயணச் சீட்டில் இருந்து எழுந்து நின்றபோது, மினிபஸ் வளைவுகளில் திரும்பும்போது பேருந்தின் முன்பக்க படிக்கட்டு வழியாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். விபத்தில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து பஸ்ஸில் பயணித்த பயனாளிகள் விபத்தில் சிக்கிய மகேஸ்வரியை மீட்டு குருவிகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மகேஸ்வரிக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.