தனக்கு கட்டாயம் திருமணம் நடக்க இருப்பதாக இளம்பெண் வாட்ஸ் அப்பில் பதிவிட்ட வீடியோ வைரலாக பரவியது. இதை அடுத்து கடைசி நேரத்தில் அவரது திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்ப சாமி நகரை சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி. அவரது மகள் ஜன்னதுல் பிர்தௌஸ் (22). இவரை முறை மாமனுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதற்கு ஜன்னதுல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அவரது எதிர்ப்பை மீறி திருமணம் வேலைகளில் இரு வீட்டினரும் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று காலை இவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் மணப்பெண் இந்த திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை எனது முறைமாமன் பல பெண்களுடன் தொடர்பில் உள்ளவர். ஆனாலும் எனது பெற்றோர் கட்டாயப்படுத்தி என் விருப்பம் இல்லாமல் அவருடன் எனக்கு திருமணம் நடத்த உள்ளனர். இந்த திருமணம் நடைபெற்றால் பிறகு நான் உயிருடன் இருக்க போவதில்லை. என தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து அதனை வாட்ஸ் அப் மூலம் நண்பர்களுக்கு பகிர்ந்தார்.
இந்த வீடியோ வைரலாக பரவியது இதைப்பார்த்த புழல் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் நேற்று காலை திருமணம் நடக்க இருந்த வீட்டிற்கு சென்று அந்தப் இளம் பெண் மற்றும் அவரது பெற்றோரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளம்பெண் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என உறுதியாக கூறினார்.
இதையடுத்து அந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் இளம்பெண் விருப்பத்தை மீறி அவருக்கு திருமணம் செய்யக்கூடாது என அவரது பெற்றோருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.