பஹ்ரைனில் வீட்டு வேலைக்காக சென்ற இடத்தில் பல இன்னலுக்கு ஆளான சென்னையை சேர்ந்த 3 பெண்கள் மீட்கப்பட்டனர். சென்னையை சேர்ந்த வள்ளி, வடிவுக்கரசி, வேளாங்கண்ணி ஆகிய மூன்று பெண்கள் கடந்த பிப்ரவரி மாதம் முகவர்கள் மூலமாக பஹ்ரைன் வீட்டு வேலைக்காக சென்றனர். வீட்டு வேலைக்கு சென்ற இடத்தில் வேலைக்கு அமர்த்தி அவர்கள் மூலம் மூவரும் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளானதாக தெரிகிறது.
உணவு கொடுக்காமல் மூவரையும் அடைத்து வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து இவர்களில் ஒருவர் வெளியிடப்பட்ட வாட்ஸ்அப் காணொளி சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து சென்னையை சேர்ந்த சமூகவியலாளரும் ஏ.ஐ.எம்.எஸ் பொது செயலாளருமான கன்யா பாபுவின் முயற்சியால் பஹ்ரைனில் இயங்கிவரும் இந்திய தூதரகத்திற்கு இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பஹ்ரைன் வெளிநாட்டவர் சட்ட மையத்தின் தலைவர் சுதீர் திருநிலத் முயற்சியால் பஹ்ரைனில் சமூக சேவையாற்றி வரும் அன்னை தமிழ் மன்றம் ஐ.சி.ஆர்.எஃப் எனும் அமைப்பின் உதவியோடு இந்த மூவரும் பத்திரமாக மீட்கப்பட்டு தகுந்த பாதுகாப்போடு தங்க வைக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து இந்திய தூதரகத்தின் தூதுவர் பியூஸ் இதர தமிழ் அமைப்பு களின் உதவியால் மூன்று பெண்களும் நேற்று பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்குரிய பயண செலவை இந்திய தூதரகமும் பொறுப்பேற்றுக் கொண்டது. இவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை அன்னைத் தமிழ் மன்றத்தின் நிர்வாகிகள் பொறுப்பேற்று வழங்கினர்.