தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக இடையே எப்போதும் தேர்தல் நேரத்தில் போட்டி நடைபெறுவது வழக்கம். தற்பொழுது பாஜகவும் தமிழகத்தில் தனது கட்சியை வலுப்படுத்த பல ஏற்பாடுகளை செய்து வருகிறது. பாஜகவினர் எப்படியாவது தமிழ்நாட்டில் தாமரை மலர வைத்துவிட வேண்டும் என்று களத்தில் இறங்கி உள்ளார்கள்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அந்தந்தக் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை முன்னிறுத்தி வரும் இந்நிலையில் தமிழகத்தில் பாஜக சார்பில் திருநங்கை ராஜம்மா என்பவரை சென்னை திரு வி க நகர் மண்டலத்துக்கு உட்பட்ட 76 வது வார்டில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இதுகுறித்து பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதுதடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றி பல்வேறு துறைகளில் முன்னேறி வரும் திருநங்கைகள் அரசியல் பிரதிநிதித்துவம் பெற வேண்டும்.
சமுதாயத்திலும் ஊக்கத்தோடு செயலாற்ற ராஜம்மாவிற்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு வாய்ப்பு கொடுத்தமைக்கு பாரதிய ஜனதா கட்சி பெருமை கொள்கிறது என்று கூறிய அவர் சமுதாயத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட ராஜம்மாவின் வெற்றி வழிவகுக்கும் என்று உறுதி பூண்டுள்ளார்.
திருநங்கை ஒருவரை வேட்பாளராக முன்னிறுத்தி ஊக்குவித்ததுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.