தமிழக ஆந்திர எல்லையான காட்பாடியில் டிரைவரிடம் ஆர்டிஓ செக்போஸ்ட் புரோக்கர் எஸ்எஸ்ஐ போட்டிபோட்டு லஞ்சம் வாங்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இதையடுத்து எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட் செய்து எஸ்பி செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தமிழக ஆந்திரா எல்லையில் கிறிஸ்டியான் பேட்டையில் வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடி மற்றும் காவல்துறை சோதனை சாவடி அமைந்துள்ளது.
இங்கு நேற்று முன்தினம் மாலை இவ்வழியாக தெலுங்கானாவுக்கு சேலத்தை சேர்ந்த 5 நெல் அறுக்கும் இயந்திரங்களை ஓட்டுனர்கள் ஓட்டி சென்றனர். அப்போது காட்பாடியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு வண்டிக்கு 500 ரூபாயும் காவல்துறை சோதனை சாவடியில் ஒரு வண்டிக்கு 300 ரூபாய் லஞ்சம் வசூலிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த வீடியோவில் செக்போஸ்ட் அலுவலகத்தில் வேலை செய்யும் சேகர் என்பவர் நெல் அறுக்கும் இயந்திரம் ஓட்டுநர்கள் இடம் 5 பேரிடம் தலா 500 லஞ்சம் பெறுகிறார். அடுத்து சிறிது தொலைவில் உள்ள காவல்துறை சேர்ந்த செக் போஸ்டை தாண்டி இந்த வாகனங்கள் சென்று அதை பார்த்ததும் சிறப்பு உதவி ஆய்வாளர் பிரகாஷ் மொபட்டில் விரட்டிச் சென்று அந்த ஐந்து வாகனங்களை சிறிது தூரத்தில் தடுத்து நிறுத்தினார்.
பின்னர் டிரைவர்களிடம் 300 லஞ்சமாக கேட்டுள்ளார் டிரைவர்கள் பணம் கொடுக்க மறுத்துவிட்டனர். அதனால் ஆத்திரமடைந்த எஸ் எஸ் ஐ ஆர் டி ஓ செக்போஸ்டில் மட்டும் 500 ரூபாய் கொடுத்துவிட்டு போறீங்கள். எங்களுக்கும் கொடுங்கள் என்று வாக்குவாதம் செய்கிறார். இந்த வீடியோ குறித்து புகார் வேலூர் எஸ்பி செல்வகுமாருக்கு சென்றது. இதையடுத்து லஞ்சம் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் பிரகாஷ் சஸ்பெண்ட் செய்து எஸ்பி செல்வகுமார் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.