எஸ்.பி.பாலசுப்ரமணியம் பல மொழிகளில் இவர் பாடிய பாடல்கள் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இவருடைய ரசிகர்கள் எப்படியாவது எஸ்பிபி மீண்டு வர மாட்டாரா என்று ஏக்கத்தில் உள்ளனர். பல இடங்களில் எஸ்பிபி மீண்டு வரவேண்டும் என்று கூட்டுப் பிரார்த்தனைகள் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா தொற்று உறுதியாகி அதற்கான சிகிச்சைக்காக எம்ஜிஎம் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் எஸ்பிபி.
தினமும் எஸ்பிபி உடல்நிலை பற்றி அப்டேட்களை வெளியிட்டு வந்தார் அவருடைய மகன் எஸ்பிபி சரண். சமீபத்தில் தனது தந்தை நன்றாக உள்ளார் எழுதிக் காட்டுகிறார். பிசியோதெரபி சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது என்று அவரது மகன் வீடியோ வெளியிட்டார்.
நேற்று எந்த ஒரு அப்டேட்டும் அவரது மகன் தரப்பில் இருந்து வரவில்லை. இன்று எம் ஜி எம் மருத்துவமனை எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல்நிலை பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கடந்த 24 மணி நேரமாக கண்காணித்து வருகிறோம். எஸ்பிபியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று அறிவித்திருந்தனர். இந்த செய்தி அறிந்தவுடன் சமூக வலைத்தளத்தில் அவரது ரசிகர்கள் எஸ்பிபி மீண்டு வரவேண்டும் என்று வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
எஸ்பிபி கவலைக்கிடம் என்ற செய்தி கிடைத்தவுடன் அவருடைய நெருங்கிய நண்பரான கமலஹாசன் விரைந்து மருத்துவமனைக்கு சென்றார். அங்கு எஸ்பிபியின் உடல்நிலை பற்றி அவரது குடும்பத்தினரிடம் கேட்டுத்தெரிந்து பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கமலஹாசன் “உயிர்காக்கும் கருவிகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களெல்லாம் (அவரது குடும்பத்தினர்) அவர் நம்பும் தெய்வங்களை வணங்கி கொண்டிருக்கிறார்கள். நலமுடன் இருக்கிறார் என்று சொல்ல முடியாதுங்க. கிரிட்டிகளா தான் இருக்கிறார் என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.