கேரளாவில் கன மழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. இந்நிலையில் கேரள மக்களின் வீடுகள் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆலப்புலா பகுதியை சேர்ந்த ஆகாஷ் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு இன்று திங்கட்கிழமை திருமணம் நடத்த பெற்றோர்கள் முடிவு செய்தனர். இவர்களின் திருமணத்தை தளவாடி பனையண்ணூர்காவு தேவி கோயிலில் திருமணம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் கனமழை காரணமாக திருமணத்தை கோவிலில் நடத்த முடியவில்லை.
அந்த கோயிலை சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. அதோடு திருமணம் நடைபெறும் இடத்திற்கு மணமக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் செல்ல மிகவும் சிரமப்பட்டனர். அதனால் மணமக்களை சமையலுக்கு பயன்படுத்தப்படும் பெரிய பாத்திரத்தில் ஏற்றி திருமணம் நடக்க இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்து இருந்ததால் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வெங்கல பாத்திரத்தில் வைத்து மணமக்களை அழைத்து சென்றனர்.
மேலும் பெற்றோர்கள் திருமணத்தை நடத்தி வைத்தனர். இதுகுறித்து ஆகாஷின் தாயார் கூறுகையில் மணமக்களை பெரிய பாத்திரத்தில் ஏற்றி செல்ல முடிவு செய்தோம். இதனால் திருமணம் குறித்த நேரத்தில் நல்லபடியாக முடிந்தது என்றாள் ஆகாஷ் செங்கனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். அதே மருத்துவமனையில் ஐஸ்வர்யா செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இருவரும் கரோனா பணியில் இருந்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே வைத்து திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்தனர். ஆனால் வெள்ளம் காரணமாக திருமண நிகழ்ச்சியை எளிய முறையில் செய்து முடித்துள்ளனர்.