தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இறந்ததாக கொடுக்கப்பட்ட குழந்தை அடக்கம் செய்யப்படும்போது கைகளை அசைத்ததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மருத்துவமனையில் சேர்த்த அவர்கள் கவனக்குறைவாக உயிருடன் விளையாடிய மருத்துவர்கள், செவிலியர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்களம் தாசில்தார் நகரை சேர்ந்த பிளவேந்திரன் ராஜா. இவரது மனைவி பாத்திமா என்ற வானரசி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த வானரசிக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது.
நள்ளிரவு 12:30 மணி அளவில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதிகாலை 3.30மணி அளவில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை இறந்தே பிறந்தது செவிலியர் தெரிவித்தனர். நேற்று காலை 8 மணி அளவில் இறந்த குழந்தையை பிளாஸ்டிக் வாலியில் வைத்து செவிலியர்கள் கொடுத்துள்ளனர். இதைப் பெற்றுக் கொண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெரியகுளம் தேனி மெயின் ரோட்டில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். அங்கு குழி தோண்டி அடக்கம் செய்யப் போகும் போது திடீரென குழந்தை கைகள் அசைவதை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பதறிப் போன உறவினர்கள் குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்து உடனடியாக குழந்தையை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கும் தாய்க்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். உயிருடன் இருந்த குழந்தையை இறந்ததாக கவனக்குறைவாக கொடுத்த மருத்துவர்கள், செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் பெரியகுளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.