கனரக லாரியை மாற்று வழியில் செல்லுமாறு அறிவுறுத்திய போக்குவரத்து போலீஸ்காரரை வடமாநில லாரி டிரைவர் ஒருவர் தாக்கிய சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலானது. மேலும் போலீஸ்காரரை அடித்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை போரூர் ஏரி சிக்னல் அருகே பைபாஸ் சாலையில் கனரக வாகனங்கள் செல்லும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த சர்வீஸ் சாலையில் மகாராஷ்டிரா மாநில பதிவு எண் கொண்ட ஒரு லாரி நேற்று முன்தினம் செல்ல முயன்றது. அந்த நேரத்தில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீஸ்காரர் அந்த லாரியை மடக்கி மாற்றுப்பாதையில் செல்லும்படி கூறியுள்ளார்.
இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. லாரியை ஓட்டி வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முஸ்தாக் அகமது என்பவர் போக்குவரத்து காவலர் சந்திரசேகரனின் கன்னத்தில் பளார் என தாக்கினார். இதில் காவலர் நிலைதடுமாறினார். இதை பார்த்ததும் சக காவலர்கள் ஓடி வந்து அந்த டிரைவரை பிடிக்க முயன்றனர். அந்த நேரத்தில் அவர் லாரியில் இருந்த கத்தியை எடுத்து காட்டி போலீசாரை மிரட்டியுள்ளார்.
இருப்பினும் காவலர்கள் அவரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். விசாரணையில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, அரசு ஊழியரை தாக்கியது, ஆபாசமாக பேசியது, போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியது, போக்குவரத்து விதிகளை மதிக்காமல் சென்றது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். போக்குவரத்து காவலரை வடமாநில டிரைவர் கன்னத்தில் அறையும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.