மேகதாது அணை கண்டிப்பாக கட்டியே தீருவோம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதம் இருந்தால் அது குறித்து எங்களுக்கு கவலை இல்லை என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார். தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக மாநில அரசு பிடிவாதமாக உள்ளது.
அம்மாநில முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான பசவராஜ் பொம்மை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரை நேற்று முன்தினம் திட்டத்திற்கு அனுமதி தரும்படி வலியுறுத்தினார். இதற்கிடையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பசவராஜ் பொம்மை கூறியது காவேரி தீர்ப்பாயத்தின் உத்தரவுபடி தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீர் வழக்கம்போல் வழங்கப்படும். கூடுதல் தண்ணீர் பயன்படுத்திக் கொள்ள கர்நாடகாவுக்கு உரிமை உள்ளது. மேகதாது அணையை கட்டியே தீருவோம் கர்நாடகா மக்கள் நலம் கருதி இத்திட்டம் செயல்படுத்தப்படும் பிரதமரும் மத்திய அமைச்சரும் விரைவில் அனுமதி அளிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர். யார் வேண்டுமானாலும் உண்ணாவிரதம் இருக்கட்டும்; வேண்டுமானால் உணவு சாப்பிடட்டும். எங்களுக்கு சம்பந்தமும் இல்லை கவலையும் இல்லை என கூறியுள்ளார்.