சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தனுஷ் என்ற மாணவன் நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது.
சேலம் மாவட்டம் கூழையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவகுமார் என்பவரின் இரண்டாவது மகன் தனுஷ். இவர் ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். இம்முறையும் தேர்வு எழுதி தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இன்று பிற்பகல் இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதிலும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் இன்று காலை தனுஷ் வீட்டில் முற்றத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஏற்கனவே பல்வேறு மாணவ, மாணவிகள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துள்ளனர்.
மேலும் ஒரு தற்கொலை அரங்கேறி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.