தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து மாவட்டங்களில் ஒவ்வொரு மாதமும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவ ராவ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களால் பெரிய அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களில் பல துறைகளை சார்ந்த வேலை அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் பங்கு பெற உள்ளன.
இந்த வேலைவாய்ப்பு முகாம்களில் அயல்நாட்டு வேலைக்கு விண்ணப்பிக்கவும் திறன் பயிற்சிக்கு பதிவு செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்படும். எனவே வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்க அனைத்து வேலை அளிப்போர் மற்றும் வேலை நாடுநர்கள் முன்கூட்டியே தொடர்புடைய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். தமிழ்நாட்டை சார்ந்த வேலை தேடும் இளைஞர்கள் அதிகளவில் முகாம்களில் பங்கேற்று பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.