டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ₹5 லட்சம் நிதி உதவி வழங்கினார். தமிழகத்தை சேர்ந்த பவானிதேவி தமிழகத்தின் பாரம்பரிய தற்காப்பு கலையான வாள்வச்சு பயிற்சி பெற்று உலக அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார்.
அவரின் ஊக்கதினையும், விடாமுயற்சியையும் கருத்தில்கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் “விளையாட்டு அலுவலர்” பதவி வழங்கப்பட்டுள்ளது. பவானி தேவி தற்போது ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை இவர்தான். அவர் தேவையான பயிற்சிகள் பெற அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. தற்போது இப்போட்டிக்கான இத்தாலி நாட்டில் பயிற்சி பெற்று வருகிறார். மேலும் சில பயிற்சிகள் பெற பவானிதேவி தமிழ்நாடு அரசிடம் ₹5 லட்சம் நிதி உதவி கோரி வந்தார்.
இந்தக் கோரிக்கையை பரிசீலித்து அவரை ஊக்குவிக்கும் வகையில் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ₹5 லட்சத்துக்கான காசோலையை பவானி தேவியின் தாயாரிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்வின் போது மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.