பாலிவுட் நடிகர் சோனு சூட் மக்களுக்காக கொரோனா காலகட்டத்தில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். மக்கள் எந்தவித உதவி கேட்டாலும் தயங்காமல் செய்து வருகிறார். கடந்த வருடம் லோக்டவுன் சமயத்தில் வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல இரண்டு பேருந்துகளை ஏற்பாடு செய்து அதன்மூலம் வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு செல்ல உதவி செய்தார் அவர் தாமாகவே முன்வந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். தெலுங்கானா மாநிலம் விகராபாத் மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் வெங்கடேஷ். அவரது தந்தை ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். கொரோனா லோக்டவுன் காரணமாக அவரது குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர தவணை செலுத்த முடியாததால் தனியார் நிதி நிறுவனம் ஆட்டோவை பறிமுதல் செய்தது. அதனால் வாழ்வாதாரம் இழந்து தவித்த வெங்கடேஷ் நடிகர் சோனு சூட் நேரில் சந்தித்து உதவி கேட்க முடிவு செய்தார். அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் இருந்து மும்பைக்கு நடந்தே சென்ற வெங்கடேஷ். தன் பயணத்தை கடந்த 1ஆம் தேதி நடக்க தொடங்கி இருக்கிறார். 8 நாட்களாக ரோடு வழியாக நடந்து சென்றார். இரவு நேரத்தில் கோயிலில் தங்கி ஓய்வு எடுத்திருக்கிறார். பிறகு மும்பையில் சோனு சூட் வீட்டுக்கு சென்றார். தனது ரசிகர் ஒருவர் 800 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்ததை அறிந்த சோனு சூட் அவருடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டார். அது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்துள்ள சோனு சூட் இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று சிறுவனுக்கு அறிவுரை கூறி அவரது குடும்பத்திற்கு உதவுவதாக கூறி உள்ளார்.