மருத்துவ காப்பீடு, ரேஷன் கார்டு எதுவும் இல்லாத நிலையில் அரசு மருத்துவமனையில் சிறுநீரக நோய் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உடனடி சிகிச்சைக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவிசெய்தார். தங்களது கோரிக்கையை அமைச்சர் உடனே நிறைவேற்றியது கண்ட சிறுவனின் பெற்றோர் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
சென்னை ஆலந்துறை சேர்ந்தவர் புஷ்பராஜ் அவரது மனைவி ரேணுகாதேவி ஏழ்மை நிலையில் வசிக்கின்றனர். அவர்களது மகன் நவீன் 10 சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு சென்றால் பல லட்சம் ரூபாய் செலவாகும் நிலை ஏற்பட்டது. அதனால் அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.
ஆனால் அங்கு முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம் அட்டை இருந்தால் சிறுவனுக்கு கான சிகிச்சையை இலவசமாக செய்யலாம் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். அவர்களிடம் மருத்துவ காப்பீடு அட்டை இல்லை. அதோடு இவர்கள் கோவிலம்பாகத்திற்கு வீடு மாறி சென்றதால் ரேஷன் கார்டும் இல்லை. இந்நிலையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று காலை 8 .15 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் செல்வதற்காக வந்தார்.
அதை அறிந்து கொண்ட புஷ்பராஜ் ரேணுகாதேவி தம்பதியினர் சிறுவனை அழைத்துக் கொண்டு சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு சென்றனர். அங்கு அமைச்சரை சந்தித்து தங்களது 10 வயது மகனின் சிறுநீரக சிகிச்சைக்கு உதவும்படி கோரிக்கை விடுத்தனர். அவற்றை விளக்கமாக கேட்ட அமைச்சர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைத்து சிறுவனுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடுகளை செய்யும்படி கூறினார்.
மேலும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் செல்போனில் தொடர்பு கொண்டு சிறுவனின் சிகிச்சைக்கு தேவையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.