4 நாட்களுக்கு முன்பு துபாயிலிருந்து 191 பேருடன் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது இரண்டாக உடைந்தது. இந்தக் கோர விபத்தில் விமானி உட்பட 18 பேர் பலியாகினர், பலர் படுகாயமடைந்தனர்.
விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் கேரளா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இது இந்தியா முழுவதும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றே கூறலாம். கொரோனா காலத்தில் இப்படி ஒரு பேரதிர்ச்சி இந்தியா சந்தித்துள்ளது என்பது சோகமான விஷயம்தான். கனமழை பெய்து கொண்டிருந்த இரவில் விமான விபத்து ஏற்பட்டாலும் மீட்பு பணி துரிதமாக நடைபெற்றது.
மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்களும், விமான நிலைய ஊழியர்கள் மட்டுமின்றி 20லிருந்து 30 பொதுமக்களும் ஈடுபட்டனர். அனைவரும் துரிதமாக செயல்பட்டதாலேயே விபத்தில் சிக்கியவர்கள் அனைவரையும் வேகமாக மீட்க முடிந்தது.
இது ஒருபுறமிருக்க விமான விபத்தில் இருந்து மீட்கப்பட்ட சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால் மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து தெரிவித்துள்ள மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் அவர்களின் உதவியை கேரளா என்றுமே மறக்காது, ஆனாலும் அவர்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. மீட்புப்பணியில் ஈடுபட்டு அவர்களுக்கு கேரள காவல்துறை நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்கள் தங்கி உள்ள இடத்திற்கு சென்ற காவலர்கள் அவர்களை வரிசையாக நிற்க வைத்து ராயல் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர். இது கேரளாவில் மிகவும் பேசப்பட்டு வருகிறது.