2022 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் ஐபிஎஸ், ஐபிஎஸ் பயிற்சி மையங்களில் சேர இன்று முதல் வரும் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் சென்னையில் உள்ள தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் கோயம்புத்தூர், மதுரையில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையங்களில் தமிழ் நாட்டை சேர்ந்த இளம் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோருக்கு 5 6 2022 அன்று நடைபெற இருக்கும் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி அளிக்க உள்ளது.
சென்னையில் உள்ள மையத்தில் 225 முழுநேர தேர்வர்களையும், 100 பகுதிநேர தேர்வர்களையும் முதல்நிலை பயிற்சிக்காக அனுமதிக்கிறது. அதேபோன்று அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணி தேர்வு பயிற்சி நிலையங்கள் கோயம்புத்தூர், மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் தலா 100 முழுநேர தேர்தல்களை முதல்நிலைத் தேர்வுக்கான அனுமதிக்கின்றனர்.
2022 குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற விரும்புவர்கள் www.civilservicecoaching.com என்ற இணையத்தளம் வாயிலாக இன்று முதல் வரும் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி மையங்களில் ஏற்கனவே முதல்நிலை தேர்வுக்கு முழு நேரப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். மேலும் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தங்கள் கல்வி மற்றும் வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை மத்திய தேர்வாணையர் குழுவின் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
தகுதியுடைய நபர்கள் 23 1 2022 அன்று நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். முதல்நிலைத் தேர்வுக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி மையங்களில் இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாக பயிற்சிக்கு அழைக்கப்படுவர். பிப்ரவரி முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.