பிரபல பட்டிமன்ற பேச்சாளர், நடுவர் பாரதி பாஸ்கர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பட்டிமன்றம் என்றாலே நம் நினைவிற்கு வருபவர் சாலமன் பாப்பையா, ராஜா, பாரதி பாஸ்கர் உள்ளிட்ட பிரபலங்கள் தான். பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் தனது பேச்சு திறமையால் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று உள்ளார்.
மேலும் பாரதி பாஸ்கர் மற்றும் ராஜா இருவரும் எதிரெதிர் அணியில் இருந்து தங்களின் கருத்துக்களை பேசுவதில் வல்லமை கொண்டு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர்கள். பாரதிபாஸ்கர் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்ததோடு எம்பிஏ படிப்பு படித்துள்ளார். மேலும் உலகின் முன்னணி தனியார் வங்கியில் முக்கிய பொறுப்பில் பணியாற்றிவருகிறார்.
அதேபோல் வங்கிப் பணிகளுக்கு இடையே பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார். மேலும் அவர் பேச்சில் நகைச்சுவையோடு கருத்துக்கள் கொண்டதாக இருக்கும். அதோடு சன் டிவியில் வாங்க பேசலாம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி உள்ளார். அண்மையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலமன் பாப்பையா, ராஜா, பாரதி பாஸ்கர் ஆகியோரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உள்ளார்.
இந்நிலையில் பாரதி பாஸ்கருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூளைக்கு செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட மருத்துவ சோதனையில் தெரிவிக்கின்றனர்.
அதற்காக அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. பாரதி பாஸ்கருக்கு லட்சுமணன் என்ற கணவரும் 2 குழந்தைகளும் உள்ளனர். பாரதி பாஸ்கர் விரைவில் நலம் பெற வேண்டும் என ரசிகர்களும் நண்பர்களும் வேண்டி வருகின்றனர்.