சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வாரத்தில் ஒரு நாள் அரசு ஊழியர்கள் வாகனங்களை பயன்படுத்தாமல் சைக்கிள் அல்லது நடை பயணமாகவே அலுவலகத்திற்கு செல்ல தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை பின்பற்றும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா ஆட்சியர் அலுவலகத்திற்கு வீட்டிலிருந்து நடந்து சென்று பேருந்து நிறுத்தத்தை அடைந்ததும் அரசு பேருந்தில் பயணம் செய்து அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.
இந்நிலையில் சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்க கீழ நாஞ்சில்நாடு பகுதியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு மாவட்ட ஆட்சியர் லலிதா மூன்று கிலோமீட்டர் தூரம் பேருந்தில் பயணம் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தடைந்தார்.
இதில் மகளிருக்கான இலவச கட்டண பேருந்தில் பயணம் செய்து அலுவலகத்திற்கு வந்துள்ளார். அதிலும் பேருந்தில் நின்று கொண்டே பயணம் செய்த மாவட்ட ஆட்சியர் கீழவீதி பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 500 மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தடைந்தார்.
இவருடன் ஆண் அலுவலர்களும் பேருந்தில் பயணம் செய்து அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அனைவரும் வாரத்திற்கு ஒரு நாளாவது இதேபோல் அலுவலர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.