பானி பூரியின் மிக தீவிர ரசிகை ஒருவர் தன் திருமண நாளில் பானிபூரியால் செய்யப்பட்ட கிரீடத்தை தலையில் அணிந்து மகிழ இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தெருவோர உணவுகளில் மிக பிரபலமானது பானி பூரி. வடமாநில சிற்றுண்டி வகையை சேர்ந்த இந்த உணவு அனைத்து மாநிலங்களிலும் பாகுபாடின்றி பிரபலமாகி வருகிறது.
மொறுமொறுவென இருக்கும் சிறிய அளவிலான பூரியில் உள்ள உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்டவைகளை வைத்து இனிப்பு, காரம், துவர்ப்பு சுவை கலந்த சட்னியை நிரப்பி பரிமாறப்படுகிறது. பிரியாணி ரசிகர்களை போல பானி பூரிக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட பானிபூரி ரசிகர் ஒருவர் அந்த உணவின் மீது உள்ள தன் காதலை வெளிப்படுத்த விரும்பினார்.
இதற்காக அவருக்கு பானிபூரியால் செய்யப்பட்ட கிரீடத்தை அணிவித்து உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பானி பூரி நிரம்பிய தட்டின் முன் அமர்ந்து உள்ள அவரது தலையில் உறவினர் ஒருவர் கிரீடத்தை அணிவிக்கிறார். இதையடுத்து அவர் மகிழ்ச்சியில் முகம் மலர சிரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிகழ்வுக்கு பானிபூரி ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். இந்த பெண் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்ற தகவல் இந்த பதிவில் குறிப்பிடப்படவில்லை.