சசிகலா அவர்கள் திருவள்ளுவர் மாவட்டம் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று சுற்றுப் பயணத்தை தொடங்கினார்.
தொண்டர்களை சந்தித்து பேசிய அவர் எம்ஜிஆர் ஜெயலலிதாவின் கொள்கைகளை கடைபிடிக்க கூடியவர்கள் தான் உண்மையான தலைவராக இருக்க முடியும். அதிமுகவுக்கு ஒற்றை தலைமை கண்டிப்பாக வேண்டும் அதே சமயத்தில் தொண்டர்கள் அனைவரையும் அரவணைத்து செல்கின்ற தலைமையாக இருக்க வேண்டும். பணபலமும் படைபலமும் ஒரு தலைமையை தீர்மானிக்க முடியாது.
மக்கள் பலமும் தொண்டர்கள் பலமும் தான் ஒரு தலைமையை தீர்மானிக்கும் தனக்கு ஆதரவாக சிலரைப் பேச வைத்துவிட்டு நான் தலைமை என்று கூறுவது தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டு வலுக்கட்டாயமாக நாற்காலியை பிடித்து கொண்டு இருந்தால் தலைவராக முடியாது.
அனைவரையும் அரவணைத்து எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நம்மால் தான் இந்த இயக்கத்தை மீண்டும் அதே பழைய நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை முழுமையாக இருக்கிறது.
ஒட்டுமொத்த தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எனது தலைமையில் அதிமுக மீண்டும் வலிமை பெறும் என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து பேசிய சசிகலா திமுக நமது கட்சியை அழித்துவிடலாம் என்று கட்சி ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை நினைத்து கொண்டிருக்கிறார்கள்.
தற்போது நடப்பது பார்க்கையில் திமுகவின் ஆசை நிறைவேறிடுமோ என்று தோன்றுகிறது அதற்கு நாமே இடம் கொடுத்து விடக்கூடாது என்று தான் நான் பொறுமையாக இருக்கிறேன் என்று சசிகலா கூறியுள்ளார்.