Home NEWS விஸ்வருபம் எடுக்கும் ஜெய்பீம் பட விவகாரம்.. பதில் கடிதத்தில் பாரதிராஜாவிற்கு 10 கேள்வி எழுப்பிய அன்புமணி...

விஸ்வருபம் எடுக்கும் ஜெய்பீம் பட விவகாரம்.. பதில் கடிதத்தில் பாரதிராஜாவிற்கு 10 கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ்…!!!

Anbumani ramadoss

ஜெய் பீம் படம் தொடர்பான சர்ச்சை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஜெய் பீம் திரைப்படம் சாதிப் பிரச்சினையோ அரசியல் பிரச்சினை அல்ல இது ஒரு சமூகப் பிரச்சனை என்று இயக்குனர் பாரதிராஜாவிற்கு பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு உள்ளது. கடந்த நவம்பர் 2ஆம் தேதி ஜெய் பீம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

சூர்யா நடிப்பில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்களும் இத்திரைப்படத்தை பார்த்து பாராட்டை தெரிவித்தனர். இருளர் இன மக்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு உண்மை சம்பவத்தை வைத்து திரைக்கதையை அமைக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படத்தை ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

ஆனால் இத்திரைப்படத்தில் காவல் அதிகாரியாக வரும் நடிகரின் வீட்டில் வன்னியர்களின் அடையாளமாக அக்னி குண்டம் பதித்த கேலண்டர் இடம்பெற்றிருந்தன. அதோடு இந்த திரைப்படத்தில் காவல் அதிகாரியின் பெயர் குருமூர்த்தி என்பது வன்னியர் சங்கத்தின் தலைவர் ஜெ குருவை நினைவூட்டுகிறது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சூர்யாவிற்கு ஒன்பது கேள்விகளுடன் கடிதம் ஒன்றை அனுப்பினார். இதற்கு சூர்யா தரப்பிலிருந்து பதில் கடிதம் அனுப்பினார். அதோடு அத்திரைப்படத்தில் அக்னிகுண்டம் கேலண்டர் நீக்கப்பட்டது.

மேலும் இந்த விவகாரம் சூடு பிடிக்க தொடங்கிய நிலையில் கடந்த வாரம் இயக்குனர் பாரதிராஜா சூர்யாவிற்கு ஆதரவாக பாமக கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில் படைப்பாளிகளுக்கு சுதந்திரம் தேவை. உங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வரவேண்டாம். சினிமாவை விட இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் உள்ளன சமூக மாற்றங்களுக்கான உங்கள் போராட்டங்களை நிறைய உள்ளன.

ஒரு அலைபேசியில் முடித்திருக்க வேண்டிய சிறு தவறுகளை சுட்டிக்காட்டி தீர்க்க வேண்டியதுமான இப்பிரச்சனையை எதிர்காற்றில் பற்றி எரியும் நெருப்பு தூங்கியது ஏன் என புரியவில்லை என கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக என்று பாரதிராஜாவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார் அன்புமணி ராமதாஸ் பதில் கடிதம்…
அன்புள்ள தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு

வணக்கம்!

’ஜெய்பீம் சர்ச்சை தொடர்பாக தாங்கள் எனக்குக் கடிதம் எழுதியிருந்தீர்கள். களப்போராளியாகவும், யாருமே துணியாத காலத்தில் சமூகநீதியைத் திரைப்படத்தில் பதிவு செய்தவர் என்ற முறையிலும், படைப்பாளியாகவும் எனக்குக் கடிதம் எழுதியதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள், மகிழ்ச்சி.

ஒடுக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய உரிமைகளுக்காக போராட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. இன்று தமிழ்நாட்டில் அதிகமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடி அவர்களுக்கு சமூக நீதியை பெற்றுத் தந்ததில் ராமதாஸுக்கு நிகராக இங்கு வேறு யாரும் இல்லை.

ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை சாதிப் பிரச்சனை அல்ல, அரசியல் பிரச்சனையும் அல்ல. இது ஒரு சமூகப் பிரச்சனை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உணவு உள்ளிட்ட தேவைகளுக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் பெருங்குடி சமுதாயமான வன்னியர் சமூகம் திட்டமிட்டு, தொடர்ந்து இழிவுபடுத்தப்படுவது தொடர்பான சமூகப் பிரச்சனை. இந்தப் பிரச்சனையில் உங்களுக்கும் திரைத்துறையினருக்கும் மிகப்பெரிய புரிதல் இல்லை என்பது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.

ஜெய்பீம் திரைப்படத்தில் சாதிவெறி பிடித்த, கொடுமைக்கார, சைக்கோ காவல் உதவி ஆய்வாளர் (வில்லன்) இல்லத்தில் மாட்டியிருக்கும் காலண்டரில் வன்னியர்களின் அடையாளமான அக்னிக் குண்டம் இல்லாமல் நீங்கள் போற்றி வணங்கும் தேசியமும், தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என்று முழக்கமிட்ட முத்துராம லிங்கத்தேவரின் படம் இருந்தால் நீங்களும், தேவர் சமுதாயமும் சும்மா இருப்பீர்களா? அல்லது கொங்கு மக்களால் கடவுளுக்கு இணையாக வழங்கப்படும் வீரத்தின் விளைநிலம் தீரன் சின்னமலையின் உருவப்படம் அச்சிடப்பட்ட நாட்காட்டி இருந்திருந்தால் அவர்கள் கொதித்து எழுந்து இருக்க மாட்டார்களா? அண்ணல் அம்பேத்கரின் புகைப்படம் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்? படைப்புச் சுதந்திரம் என்று சும்மா இருந்திருப்பீர்களா?

ஆனால் ஒன்றை மட்டும் சொல்கிறேன், மேற்கண்டவற்றில் எந்தக் காட்சி அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தாலும் அதை கண்டித்தும் முதல் குரல் என்னிடமிருந்துதான் வந்திருக்கும்.

வானளாவிய படைப்புச் சுதந்திரம் நடிகர் சூர்யாவுக்கு மட்டும்தானா? இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க முனைந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு அந்தப் படைப்புச் சுதந்திரம் மறுக்கப்பட்டது ஏன்? கடுமையான கண்டனக் கடிதத்தைத் தாங்கள்தான் எழுதியிருந்தீர்கள், நினைவு இருக்கிறதா?

சமீபத்தில் வெளியான Family Man- II தொடர் முழுவதும் தடை செய்ய வேண்டுமென்று கடுமையான எச்சரிக்கை விடுத்தீர்கள். அப்பொழுது எங்கே போயிற்று உங்கள் படைப்புச் சுதந்திரம்? அண்மையில் வெளியான ’கர்ணன்’ படத்தில் 1997ஆம் ஆண்டு என்று இருந்ததை மாற்றி ’1990-களின் இறுதியில்” என்று போட வைத்தபோது, என்னவாயிற்று உங்கள் படைப்புச் சுதந்திரம்?

படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் வகையில் வன்னியர்களுக்கு புனிதமான அக்னிக் குண்டத்தை வைத்து சத்ரியர் என்ற அடிக்குறிப்பு போட்டு கொலையாளிகளாகக் காண்பித்தால் அதற்கு நீங்களும், திரைத்துறையினரும் ஆதரவு அளிக்கிறீர்களா? என 4 பக்கங்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார் அன்புமணி ராமதாஸ். இந்த கடிதம் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டு சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Exit mobile version