கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் பகுதியைச் சேர்ந்த 7 பேர் நேற்று இரவு சுவாமி தரிசனத்திற்காக திருப்பதி வந்தனர். திருப்பதி மேற்கு சர்ச் எதிரே உள்ள ரயில்வே பாலத்திற்கு அடியில் ஏழு பேர் காரில் சென்று கொண்டிருந்தபோது ஏற்கனவே பெய்து கொண்டிருந்த பலத்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.
திருப்பதிக்கு வந்த பக்தர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்தப் பகுதியில் எந்த அளவிற்கு நீர் ஓடுகிறது என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறி உள்ளனர். எனவே எப்படியாவது சென்ற விடலாம் என்று காரை ஒட்டி சென்றுள்ளனர். ஆனால் அப்போது சுமார் 5 அடி உயரத்திற்கு அந்த இடத்தில் மழை வெள்ளம் சென்று கொண்டிருந்ததால் கார் பலமாக வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது.
மேலும் கார் செல்ல முடியாமல் நடு வழியிலேயே நின்றது காரில் பயணித்த 7 பேரும் தண்ணீரில் மூழ்கினர். அதில் பயணித்த ஏழு பேரில் புது மணப் பெண்ணான சந்தியா என்பவர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்தார். மற்ற 6 பேரும் காரில் இருந்து வெளியேறி உயிர் பிழைத்தனர்.
அவர்களில் ஒரு குழந்தை மட்டும் உடல்நிலை பாதிப்பால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் காரை வெள்ளத்தில் இருந்து மீட்டு விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.