பப்ஜி விளையாட்டு மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளை தனது யூடியூப் சேனல் மூலம் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் மதன் பேசி வந்தார். இதுகுறித்து புகார் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து யூடியூப் சேனல் நடத்தி வந்த மதனை தேடி வந்தனர். அந்தநிலையில் யூடியூப் சேனல் அட்மினாக இருந்த அவருடைய மனைவி கிருத்திகா போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தர்மபுரியில் கைது செய்தனர். பின்னர் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.
அவர் தனது யூடியூப் சேனல் ஊழியர்களை அமர்த்தி ஆன்லைன் விளையாட்டை பின் தொடர்ந்து வரும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உடன் ஆபாசமாக பேசி அதன் மூலம் பணம் சம்பாதிப்பது தெரிய வந்தது. மோசடியாக சம்பாதித்த பணத்தில் சொகுசு கார், ஆடம்பர பங்களாக்கள் வாங்கிக் குவித்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மதனின் வங்கி கணக்குகளில் பண இழப்புகள் குறித்து வருமான வரித்துறையினர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மதன் நடத்தி வந்த சர்ச்சைக்குரிய யூடியூப் சேனல் மூலம் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மதன் நடத்திவந்த யூடியூப் சேனலை தடை செய்ய கோரி போலீசார் சார்பில் யூடியூப் சேனல் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதப்பட்டது.
அந்தக் கடிதத்தைத் தொடர்ந்து யூடியூப் சேனல் நிர்வாகம் மதன் நடத்திவந்த சேனலை தடைசெய்தது. மேலும் இந்த யூடியூப் சேனலில் இரண்டு ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் மதனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்படி இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்று போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.