தூத்துக்குடியை சேர்ந்த யாசகர் பூல்பாண்டியன் தான் யாசகம் பெற்ற 20,000 ரூபாயை இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு வழங்குவதாக கூறினார். தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவர் நாள்தோறும் அப்பகுதியில் யாசகம் பெற்று வருகிறார்.
அவர் யாசகமாக பெற்ற பணத்தை சேமித்து தனக்கென்று செலவழிக்காமல் பொது நிவாரண நிதிக்கு வழங்கிவருகிறார். அதேபோல் கொரோனா காலகட்டத்தில் தான் சேமித்து வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயை பலமுறை மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நிவாரண நிதியாக கொடுத்துள்ளார்.
இந்தநிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணத்தினால் இலங்கை மக்களுக்கு உதவ தான் யாசகம் பெற்று சேமித்து வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாயை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பூல்பாண்டி வழங்கியுள்ளார். தான் யாசகம் பெற்று சிறுகச் சிறுக சேமித்த பணத்தை மருந்துக்கடை நண்பரிடம் கொடுத்து சேமித்து வைப்பார்.
ரூ.10 ஆயிரம் தொகை சேர்ந்தவுடன் நிவாரண நிதிக்கு அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இம்முறை சேமித்து வைத்த 20 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார்.