அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டம், சாத்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி – ஜெயலட்சுமி தம்பதியின் இளைய மகள் கனிமொழி (17) பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நீட் தேர்வு எழுதியுள்ளார். மாணவி கனிமொழி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 562 மதிப்பெண் பெற்று பள்ளியிலேயே முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கனிமொழி நீட் தேர்வு கடினமாக சிறந்ததாகவும் சரியாக எழுதவில்லை என தந்தையிடம் கூறி மன உளைச்சலில் இருந்துள்ளார். அவரை தந்தை சமாதானப்படுத்தி தேற்றி உள்ளார். எனினும் மருத்துவக் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற பயத்தில் நேற்று இரவு வீட்டில் தனிமையில் இருந்த கனிமொழி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியே சென்று இருந்த கருணாநிதி மற்றும் ஜெயலட்சுமி வீட்டிற்கு திரும்பி வந்தபோது கனிமொழி தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனிமொழியின் தந்தை கருணாநிதி வழக்கறிஞராக உள்ளார். கனிமொழியின் உடன்பிறந்த சகோதரி கயல்விழி 19 பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் 2 ஆம் ஆண்டு பயின்று வருகிறார்.