சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் பலர் பாலியல் புகார் அளித்தனர். மூன்று போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து அவரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
இதனிடையே பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர்கள் மூலம் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகிலா நீதிமன்ற நீதிபதி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா பள்ளியின் தாளாளராக இருந்தவர். அதனால் அவருக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க வேண்டுமென செங்கல்பட்டு கோர்ட்டில் அவரது வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கு நேற்று நீதிபதி தமிழரசி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முதல் வகுப்பு சிறை கோரிய சிவசங்கர் பாபாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.