ஊத்துக்கோட்டை அருகே வெள்ளத்துக்கோட்டை கிராமத்தில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஆசிரமம் நடத்தி வந்த பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே பூண்டி அடுத்து கோட்டை கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக முனுசாமி என்ற பூசாரி ஆசிரமம் நடத்தி வருகிறார். இவரது ஆசிரமத்தில் குழந்தை பாக்கியம் இல்லாத இளம் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும் என தகவல்கள் பரவியது.
இதனால் இந்த பூசாரியிடம் சென்று சாமியை வணங்கி வந்தால் குழந்தை பாக்கியம் மற்றும் திருமணம் ஆகும் என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டது. இதனால் கும்மிடிப்பூண்டி அருகே மேதிபாளையத்தை சேர்ந்த ஜெகன் அவரது மனைவி மகேஸ்வரி இவர்களுக்கு திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை இதனால் மகேஸ்வரி ஊத்துககோட்டை அருகே வெள்ளத்துக் கோட்டை கிராமத்தில் உள்ள சாமியாரைப் பற்றி தெரியவந்தது.
அங்கு சென்ற மகேஸ்வரியை அவரது தாயாருடன் தங்கி அங்கு 14 நாட்கள் குழந்தை பேறுக்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் செம்பேடு கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரியின் சித்தப்பா ராமகிருஷ்ணன் மகள் ஹேமமாலினி அவர் திருவள்ளூர் அடுத்த தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அந்த பூசாரி ஹேமமாலினிக்கு நாக தோஷம் இருப்பதாகவும், இந்த தோஷத்தை குணப்படுத்த வேண்டும் என்றால் பவுர்ணமி அன்று பூஜை செய்ய வேண்டும் அப்படி செய்தால் தான் தோஷம் நீங்கும் என கூறியுள்ளார்.
இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அதன்பிறகு கடந்த 13ஆம் தேதி தான் மீண்டும் தனது பெரியம்மா இந்திராணி, அக்கா மகேஸ்வரி ஆகியோருடன் ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். கடந்த 13ம் தேதி இரவு பூஜைக்கு வருமாறு ஹேமமாலினியை பூசாரி அழைத்துள்ளார், அவரும் பூஜையில் கலந்துகொண்டு இரவு 12 மணி வரை பூசாரிக்கு வேண்டிய பணிகளை செய்து கொடுத்திருக்கிறார். அப்போது அங்கு திடீரென வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். இதை அறிந்த சாமியார் முனுசாமி அந்த பெண்ணிற்கு முதலுதவி அளித்துள்ளார்.
ஆனால் முடியவில்லை பின்னர் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் வெங்கல் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கும் கல்லூரி மாணவியை காப்பாற்ற முடியாததால் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 16 ஆம் தேதி மாணவி இறந்து விட்டார். இது குறித்து மாணவி ஹேமமாலினியின் பெற்றோர்கள் மகள் சாவில் மர்மம் இருப்பதாக பெண்ணலூர் பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பூசாரி முனுசாமியை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.