ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரை சக மீனவர்கள் சுமார் ஐந்து நாட்கள் விசைப்படகுகளில் உள்ள ஐஸ் பெட்டியில் வைத்து பதப்படுத்தி கரைக்கு கொண்டு வந்துள்ளனர். சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவர் மீன் பிடித்தல் தொழிலை செய்து வருகிறார்.
மீனவர் ஜெகன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு உள்ளது. அவர் கடந்த 16 ஆம் தேதி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். அதில் அவருடன் விசைப்படகு ஓட்டுனர் அந்தோணி பொன் சிலி தலைமையில் சுமார் 12 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
கடந்த 30ஆம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ராமநாதபுரம் பகுதியில் கடலாடி தாலுகாவில் சேர்ந்த 56 வயதுடைய அசாருதீன் என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அங்கிருந்த மீனவர்கள் காசிமேடு மீன்பிடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் அசாருதீன் உடலை விசைப்படகில் உள்ள ஐஸ் பாக்ஸில் வைத்து பதப்படுத்தி இன்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மீனவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மீனவரின் உடல் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.