சென்னையில் 2,700 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் தினமும் 6 லட்சம் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த மே 8 முதல் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பெண்களைத் தொடர்ந்து திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்களும் நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று முதல்வர் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நகரப் பேருந்துகளில் பயணிக்க கட்டணமில்லா பேருந்து சீட்டு அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 12ஆம் தேதி முதல் கடந்த ஒரு வாரம் வரை தமிழகம் முழுவதும் அரசு மாநகரப் பேருந்துகளில் 78 லட்சம் பெண்கள் பயணம் செய்ததாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்திருந்தார்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் தினமும் 2,500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் 40% பேருந்துகள் சாதாரண கட்டண பேருந்துகள் இவற்றில் மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் உதவியாளர்கள் ஆகியோர் கட்டணம் இல்லாமல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் தினமும் 6 லட்சம் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்து வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை காரணமாக இருசக்கர வாகனம் மற்றும் கார், வாடகை கார், ஆட்டோவில் பயணம் செய்த பெண்கள் கூட பேருந்துக்கு மாறியுள்ளனர்.