பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் அவர்கள் தலைமையில் வேல் யாத்திரை நடைபெற்று வருகிறது. தமிழக அரசு இந்த யாத்திரையை நடத்த தடை விதித்து உள்ளது . அதனை மீறி சென்னை திருவொற்றியூரில் இருந்து ஆலந்தூர் நோக்கி யாத்திரை சென்ற பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் மற்றும் 300 பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
திருத்தணியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கைது செய்யப்பட்டார். காலை கைது செய்து மாலையில் விடுவிக்கப்பட்டார். இன்று திருவெற்றியூர் திருவுடை அம்மன் கோயிலில் வழிபாடு செய்ய வந்தவர் கோவில் நடை மூடியிருந்ததால் கற்பூரம் ஏற்றி வெளியிலே இருந்து வழிபட்டார். அப்போது அருகே இருந்த தற்காலிக மேடையில் பேசிய முருகன் திமுகவை இந்து விரோத கட்சி என விமர்சித்தார்.
அதனைத் தொடர்ந்து பாஜக யாரை கை காட்டுகிறதோ அவர்கள் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஆவார் என்று கூறினார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜக மாநிலத் தலைவர் இப்படிக் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சையான பேச்சை பேசியதுடன் வேலினை கையில் ஏந்தியபடி மேடையை விட்டு இறங்கிய வேல்முருகன் அவர்களை போலீசார் கைது செய்தனர். அவருடன் யாத்திரை வந்த சுமார் 300க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
இதுபோல பாஜகவின் துணை தலைவர் அண்ணாமலை அவர்கள் இந்த வேல் யாத்திரை தமிழகம் முழுவதும் முடிந்த பிறகு தமிழகத்தில் நிச்சயமாக தாமரை மலரும் என்று கூறியுள்ளார்.