உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று கோலாகலமாக நடைபெற்றது. உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று ஜனவரி 17 காலை 7 மணி அளவில் அலங்காநல்லூர் கோட்டை முனிசாமி வாடிவாசல் திடலில் போட்டி துவங்கியது. இதற்காக 800 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்து அனுமதி பெற்றனர்.
சிறந்த காளைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட இருந்தது. அதேபோல் சிறந்த மாடுபிடி வீரருக்கு சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்து இருந்தார்.
ஜல்லிக்கட்டு விழா ஏற்பாட்டாளர்கள் கூறுகையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 400 ஆண்டுகள் பழமையானது ஜல்லிக்கட்டு போட்டிகள் வாடிவாசலில் இருந்து காளையின் திமிலைப் பிடித்தபடி சுமார் 50 அடிக்கு அங்கிருக்கிற மாரியம்மன் கோயில் வரை விழாமல் சென்றாலே வெற்றிதான்.
கொரோனா தொற்று காலம் என்பதால் 300 வீரர்கள் 150 பார்வையாளர்கள் என அரசு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. வெளியூர் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. இன்று நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 21 காளைகளை பிடித்த மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டனர்.
இவருக்கு தமிழக முதல்வர் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட்டது. 19 காளைகளை பிடித்து இரண்டாம் இடம் பெற்ற அலங்காநல்லூர் ராம்குமாருக்கு மோட்டார் பைக் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் 13 காளைகளை பிடித்து மூன்று இடம் பிடித்த சித்தாலங்குடி கோபாலகிருஷ்ணனுக்கு மோட்டார் இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.