தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக இன்று (ஜூன் 1) திருச்சிக்கு வருகை தருகிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய். அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவிப்பதற்காக வருகை தருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் க்யூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது என தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு விஜய் வெற்றி பெற்றிருந்தார். அதில், பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக நீடிக்க முடிவு செய்த அவர், திருச்சி கிழக்கு தொகுதி பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார்.
இந்தச் சூழலில், தன்னைத் தேர்ந்தெடுத்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு தனது நன்றிக்கடனைச் செலுத்தும் விதமாக இப்பயணம் அமைந்துள்ளது. இன்று மாலை 4 மணியளவில் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார் முதலமைச்சர் விஜய்.
முதலமைச்சரின் வருகையையொட்டி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு தலைமைக் கழகம் சில கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. முதலமைச்சரின் பாதுகாப்பு கான்வாயை பின்தொடர்ந்து கட்சித் தொண்டர்கள் யாரும் இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களில் வரக்கூடாது.
பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் போக்குவரத்தைச் சீரமைக்க காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.கியூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
குறிப்பாக, பாதுகாப்பு கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் – சிறுமியர், பள்ளி மாணவ – மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான கியூஆர் குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
செயிண்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று முடிந்துள்ளன. திருச்சி மாநகர காவல் ஆணையர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருச்சியின் அடையாளங்களான மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயம் ஆகியவை இணையும் மையப் பகுதியில் இந்த நன்றி அறிவிப்பு கூட்டம் நடப்பதால், டெல்டா மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.










