தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மே 10 அன்று தமிழ்நாட்டின் ஒன்பதாவது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, மாநிலத்தின் மிக முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டங்களை தீவிரமாக நடத்தி வருகிறார்.
இதில் ஒட்டுமொத்த தொழில் துறையினரும், பொருளாதார வல்லுநர்களும் உற்று நோக்கிய மிக முக்கியமான விஷயம்.. பரந்தூர் இரண்டாவது சர்வதேச விமான நிலையத் திட்டம். தேர்தலுக்கு முன்பு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, விவசாயிகளின் நில உரிமைகளையும் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளையும் காக்க வேண்டும் என்ற நோக்கில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தவர்களில் விஜய் முதன்மையானவர்.
ஆனால், தற்போது முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த பிறகு, மாநிலத்தின் நிதி நிலைமை மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை சமரசம் செய்ய முடியாத பொறுப்பு அவருக்கு வந்துள்ளது. அண்மையில் பரந்தூர் திட்டம் குறித்து அவர் நடத்திய உயர் மட்ட அதிகாரப்பூர்வ ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, வெளியாகி இருக்கும் செய்திகள் தமிழகத்தின் தொழில் வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன
இத்திட்டத்தை முற்றிலும் கைவிடவில்லை (‘ஹால்ட்’ செய்யவில்லை), மாறாக மாற்று வழிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக (‘ஹோல்ட்’) தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் விஜய் தற்போது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளார். மக்களின் நிலங்களையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் காப்பது அவரது அரசியல் கொள்கை. அதே நேரத்தில், மாநிலத்தின் உள்கட்டமைப்பை வளர்ப்பது அவரது அரசாங்கத்தின் கடமை. எனவேதான் அவர் இத்திட்டத்தை ‘ஹால்ட்’ செய்யாமல் ‘ஹோல்ட்’ செய்துள்ளார்.
அரசு அதிகாரிகள் தற்போது பரந்தூர் திட்டத்தின் நில எடுப்பு முறையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வர ஆலோசித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு சந்தை மதிப்பை விட பல மடங்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது, நீர்நிலைகளைப் பாதிக்காத வண்ணம் விமான நிலையத்தின் வரைபடத்தை (Layout) சற்றே மாற்றி அமைப்பது, மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளை உறுதி செய்வது போன்ற மாற்றுத் திட்டங்களை விஜய் அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.










