புதுடெல்லி: தொகுதி மறுவரையறை மசோதா திடீர் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எங்கள் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்ல வேண்டுமா அல்லது நாடாளுமன்றத்துக்கு வர வேண்டுமா என காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி.யும் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் பெர்ஹாம்பூர் தொகுதி வேட்பாளருமான அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், “கட்சியின் அனைத்து உயர்மட்டத் தலைவர்களும் தற்போது தேர்தல் பிரச்சாரப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் திடீரென இந்த மசோதாவை அறிமுகப்படுத்தியதன் மூலம், அவர்கள் அவைக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளனர்.
இப்போது, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக 2029 பொதுத் தேர்தலின் போது மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்படாமல் போகும் சூழலும் உள்ளது. இது நேர்ந்தால், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அமலாக்க எதிர்க்கட்சிகள் தங்களைத் தடுப்பதாக பாஜக புகார்களை முன்வைக்கும். எனவே, மகளிர் சட்டம் நிறைவேறுவது அல்லது தோல்வியடைவது ஆகிய இரண்டுமே பாஜகவிற்கு சாதகமாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.










