மீன்களை சுத்தம் செய்யும் தொழில் செய்து மகளை டாக்டருக்கு படிக்க வைத்து சாதனை படைத்த பெண் தொழிலாளிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மயிலாடுதுறையை சேர்ந்தவர் ராஜாரமணி மீன் மார்க்கெட்டில் மீன்களை சுத்தம் செய்யும் வேலை செய்து வந்தார்.
இவரது மகள் விஜயலட்சுமி 24 இவர் பிளஸ் 2-வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் 2014-இல் மருத்துவக் கல்லூரிக்கான கட் ஆப் மார்க் 180க்கு 170 மட்டுமே இருந்ததால் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. எனில் ரஷ்யாவில் உள்ள ஸ்டாவ்ரோபோல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நன்கொடை இல்லாமல் ரூபாய் 7 லட்சம் செலவில் மருத்துவ படிப்பில் விஜயலட்சுமியை அவரது தாயார் சேர்த்தார்.
இதற்காக தான் வாங்கிய வீட்டையும் விற்று மகளுக்காக செலவு செய்தார். 6 ஆண்டு மருத்துவ படிப்பை முடித்து தேர்விலும் வெற்றி பெற்று விஜயலட்சுமி மருத்துவராக தமிழகம் திரும்பினார். இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்வதற்காக தகுதி தேர்வு எழுத இரவு பகலாக விஜயலட்சுமி தற்போது படித்து வருகிறார்.
வரும் ஜூன் மாதம் தகுதி தேர்வு நடக்கிறது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் “பெண்களின் உயர்கல்வியில் தமிழ்நாடு இன்று அடைந்திருக்கும் உயரம் என்பது அரசால் மட்டும் நிகழ்ந்த சாதனை அல்ல மயிலாடுதுறை ரமணி போன்ற தன்னலம் கருதாத பல கோடி தாய்மார்களின் உழைப்போடு நிகழ்த்தப்பட்ட கூட்டு சாதனை. வாழ்த்துக்கள் மருத்துவர் விஜயலட்சுமி” என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் மயிலாடுதுறையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஓய்வெடுத்தார். அப்போது அந்த ஹோட்டலுக்கு டாக்டரான மகள் விஜயலட்சுமி மற்றும் மகளுடன் சென்ற ராஜாரமணி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மயிலாடுதுறை கலெக்டர் லலிதா உடனிருந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில், மீன்களை கழுவி சுத்தம் செய்யும் பணியை செய்து தனது மகளை மருத்துவம் படிக்க வைத்த திருமதி ரமணி, அவரது மகள் மருத்துவர் விஜயலட்சுமி மற்றும் சகோதரர் ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். pic.twitter.com/rDWVfn5NZE
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 31, 2022