ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்” என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில்ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும்.
மனித ரத்தத்துக்கு மாற்று எதுவுமில்லை. உடலில் ஓடும் உயிர்த்திரவம் ரத்தம். மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கும். ரத்த தானத்தின்போது 350 மில்லி மட்டுமே எடுக்கப்படுகிறது. ஒருவர் தானமாகக் கொடுக்கும் ரத்தத்தின் மூலம் 3 பேரைக் காப்பாற்ற முடியும். கொடையாளி அளிக்கும் ரத்தம் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்கள் என்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. இவற்றைத் தனித்தனியாகப் பெறும் நோயாளிகள் மூவர், காப்பாற்றப்படுகின்றனர்.
யாரெல்லாம் ரத்தம் கொடுக்கலாம்?
- 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட யார் வேண்டுமானாலும் ரத்தத் தானம் செய்யலாம்.
- அவர்களின் எடை 45 கிலோவுக்குக் குறையாமல் இருக்கவேண்டும்.
- ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறையும் பெண்கள் 4 மாதங்களுக்கு ஒருமுறையும் ரத்தத் தானம் செய்யலாம்.
- உடலின் வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
யார் ரத்தம் தரக்கூடாது?
- டைபாய்டு, மலேரியா போன்ற காய்ச்சல் வந்தவர்கள், சிகிச்சை பெற்று ஆறு மாதங்கள் வரை ரத்தத் தானம் செய்யக் கூடாது.
- மது அருந்தியவர்கள் அடுத்த 24 மணி நேரம் வரை ரத்தம் அளிப்பது தவறு.
- மாதவிடாய் தொடங்கி 5 நாட்கள் வரை ரத்தம் தரக்கூடாது, கர்ப்பிணிகள், தாய்ப்பால் அளிக்கும் பெண்கள் ஓராண்டு வரை ரத்த தானம் செய்யக்கூடாது.
- எச்.ஐ.வி., மஞ்சள் காமாலை தொற்றுள்ளவர்களின் ரத்தத்தைப் பெறக்கூடாது.
- இதயநோய், காசநோய், வலிப்புநோய் உடையவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோயாளிகள் எப்போதும் ரத்ததானம் செய்யக்கூடாது.
எந்த ரத்தம் எந்த ரத்தத்திற்கு பொருந்தும் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று அட்டவணை கீழே:
ஒருவருடைய இரத்த வகை | இவர்களுக்கு இரத்தம் கொடுக்கலாம் | இவர்களிடமிருந்து இரத்தம் பெறலாம். |
ஏ வகை | ‘ஏ’ மற்றும் ‘ஏ.பி.’ வகைகள் | ‘ஓ’ மற்றும் ‘ஏ’ வகைகள் |
‘பி’ வகை | ‘பி’ மற்றும் ‘ஏ.பி’ வகைகள் | ‘ஒ’ மற்றும் ‘பி’ வகைகள் |
‘ஏ.பி.’ வகை | ‘ஏ.பி.’ வகை | ‘ஓ’, ‘ஏ’, ‘பி’ மற்றும் ‘ஏ.பி.’ வகைகள் |
‘ஓ’ வகை | ‘ஓ’, ‘ஏ’, ‘பி’ மற்றும் ‘ஏ.பி.’ வகைள் | ‘ஓ’ வகை |