மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்புகள் வட மாநிலங்களில் நடந்து வருகிறது. தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் டாட்டியா மாவட்டத்தின் ஹரிகேஷ்வரில் நடந்து வருகிறது. இங்குள்ள நர்மதா நதிக் கரையிலுள்ள ராணி அகில்யா பாய் கோட்டை,மற்றும் சிவன் கோயில்களிலும் நடந்துவருகிறது.
இங்கு நடிகர் கார்த்தி மற்றும் ரகுமானுடன் நடிகை திரிஷா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. நர்மதா நதியின் கரையில் சிவலிங்க சிலைகள் உள்ள பகுதியில் திரிஷா செருப்பு காலுடன் நடந்து செல்வது போன்று நடித்துள்ளார். இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இதுகுறித்து அந்த மாநில இந்து வித்யா மண்டல அமைப்பின் தலைவர் தினேஷ் கட்டார் ஹரிகேஷ்வர் போலீஸ் நிலையத்தில் திரிஷா மீதும், இயக்குனர் மணிரத்னம் மீதும் புகார் அளித்துள்ளார். இந்துக்கள் புனிதமாக கருதும் இடத்தில் திரிஷா செருப்பு காலுடன் நடந்து நடித்துள்ளார். அதனை மணிரத்னம் இயக்கி உள்ளார்.
இந்து கடவுள்களையும். இந்துக்களையும் அவமதித்த இவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அந்த புகாரில் கூறியுள்ளார்.இதுகுறித்து போலிசாரும் விசாரணையை தொடங்கி உள்ளனர்.